வங்கதேசத்தின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்பு
வங்கதேசத்தில் பதினெட்டு மாத கால இடைக்கால ஆட்சி முடிவுக்கு
வந்துள்ளது. சமீபத்தில் நடந்த பொதுத்தேர்தலில் வங்கதேச தேசியவாதக் கட்சி
மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதையடுத்து, அந்த நாட்டின் புதிய
பிரதமராக தாரிக் ரஹ்மான் இன்று அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தலைநகர் டாக்காவில் நடைபெற்ற இந்த விழாவில் இந்திய நாடாளுமன்றச் சபாநாயகர் ஓம்
பிர்லா கலந்துகொண்டு, பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துக் கடிதத்தை அவரிடம்
வழங்கினார். மேலும், அவரை இந்தியாவிற்கு வருமாறு முறைப்படி அழைப்பு
விடுத்துள்ளார்.
ஈரான் - அமெரிக்கா அணுசக்தி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்
ஈரான் நாட்டின் அணுசக்தி திட்டம் தொடர்பாக நிலவி வரும்
சிக்கல்களைத் தீர்க்க, அமெரிக்கா மற்றும் ஈரான் அதிகாரிகளுக்கு இடையேயான இரண்டாம்
கட்டப் பேச்சுவார்த்தை ஜெனீவாவில் நடைபெற்றது. சுமார் மூன்று மணி நேரம் நீடித்த
இந்தப் பேச்சுவார்த்தை மிகவும் ஆக்கப்பூர்வமாக அமைந்ததாக ஈரான் வெளியுறவுத்துறை
அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார். எதிர்காலப் பேச்சுவார்த்தைகளுக்கான
வழிகாட்டுதல் கொள்கைகளில் இரு நாடுகளும் பொதுவான உடன்பாட்டை எட்டியுள்ளதாகத்
தெரிகிறது.
ஜப்பானின் முதலீடுகளை வரவேற்ற டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் நாட்டின் எரிசக்தி
மற்றும் தாதுக்கள் தொடர்பான திட்டங்களில் முப்பத்தி ஆறு பில்லியன் டாலர் முதலீடு
செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான வர்த்தக
ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த முதலீடு மேற்கொள்ளப்படுகிறது. ஜப்பானிய பிரதமர்
சானே தகாச்சி வாஷிங்டன் செல்வதற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது
குறிப்பிடத்தக்கது.
சமூக வலைதளங்களுக்கு பிரிட்டன் அரசு தடை விதிக்கத் திட்டம்
பதினாறு வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப்
பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் புதிய சட்டத்தை இங்கிலாந்து அரசு விரைவில்
கொண்டு வரவுள்ளது. ஆஸ்திரேலியா, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் ஏற்கனவே இத்தகைய
கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. சிறுவர்களின் மனநலம் மற்றும் தூக்கமின்மை போன்ற
பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நாட்டு பிரதமர்
கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் பனிச்சரிவு: ரயில் தடம் புரண்டது
சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் ஏற்பட்ட கடும்
பனிச்சரிவு காரணமாகப் பயணிகள் ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
பிரிக் நகரிலிருந்து புறப்பட்ட இந்த ரயில் ஸ்டாக்ராபன் பகுதியில்
சென்றுகொண்டிருந்தபோது, மலை உச்சியிலிருந்து சரிந்த பனிப்பாறைகள் தண்டவாளத்தில்
விழுந்தன. உடனடியாக ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப் படையினர் அங்கு விரைந்து சென்று
மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
